Nov 26, 2009

தமிழனுக்காய் குரல் கொடுத்தால் தண்டனை நிச்சயம்.


தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலைப் புலிகளால் வருடாவருடம் நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்ள கனடா சென்ற அவர் நேற்று கனேடிய நேரம் இரவு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரை பயங்கரவாதம் குறித்து கனடா பின்பற்றும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அமைந்தது என்ற வகையில் அவர் கனேடிய காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கனேடிய காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை கனடாவில்; ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வில் இன்று இரவும் சீமான் உரையாற்ற இருந்தார் என்றும், நாளை நடைபெறும் நிகழ்விலும் உரையாற்ற இருந்தார் என்றும் கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் கனேடிய அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நாளை நடைபெறவுள்ள மாவீரர் தினத்தில் சீமான் ஆற்ற இருந்த உரையை தடுப்பதுவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதற்கான பிரதான காரணம் எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இது குறித்து கனேடிய அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகவில்லை என்பதுடன் உத்தியோகபூர்வமாக எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.என்று சில இணையதள செய்திகள் கூறுகின்றது.