குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளை சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த மாத இறுதியில் சீனாவில் இருந்து 2 கன்டெய்னர்களில் பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், அவற்றின் விவரங்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுங்க இலாகா துறை கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள், அந்த கன்டெய்னர்களில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள சீன பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றை பரிசோதனை செய்த போது, பொம்மைகள் தரம் குறைந்ததாகவும், உற்பத்தியாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடாமல் இருந்ததும் தெரிந்தது. மேலும், பொம்மைகளில் காரீயம் எனும் ரசாயனம் கலந்த பெயின்ட்டுகள் பளிச்சிடும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பதும், இத்தகைய பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடினால், நுரையீரல் தொடர்பான நோய்கள் உண்டாகும் என்பதும் தெரிய வந்தது.
மேலும், இறக்குமதி செய்த நிறுவனம் அளித்த தரச் சான்றிதழ்களுக்கும், பொருட்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. இதையடுத்து, சீன தயாரிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.