May 25, 2010

வாய்சொல்லில் வீரரடி


உள்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ள நக்சலைட்களை ஒடுக்குவோம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2வது முறையாக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நக்சலைட் வன்முறை, தீவிரவாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் விவகாரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, நதி நீர் பங்கீடு பிரச்னை, தனி மாநில கோரிக்கை, வளர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் சளைக்காமல் பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

நக்சலிசம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சட்டம்&ஒழுங்கு மாநில அரசின் பிரச்னை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நக்சலைட்கள் வன்முறையை ஒடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவத் தான் வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த விவகாரத்தில் உள்துறை
அமைச்சர் சிதம்பரம் தனக்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியது பற்றி கேட்கிறீர்கள். இதற்கு அவரே விளக்கம் அளித்து இருக்கிறார். சில வியூகங்களை உரிய அமைச்சரவையின் உரிய குழுக்களில் தான் விவாதிக்க முடியும்.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய, மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாடு கிடையாது. மாவோயிஸ்ட்களுக்கு சில வழிகளில் நிதி கிடைக்கிறது. அதை வைத்து ஆயுதங்கள் வாங்குகிறார்கள்.
சில மனித உரிமை அமைப்புகள் நக்சல் திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்வதை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. வன்முறையை பரப்பாதவரை எந்த தடையும் விதிக்கப்பட மாட்டாது. நக்சலிசம், தீவிரவாதம் இரண்டையும் கட்டுப்படுத்தாவிட்டால் நமது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.
ஐ.பி.எல். விவகாரம்:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மீதான புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த புகார்கள் குறித்து நிதியமைச்சகம் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறது. தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதி வாரி சென்சஸ்:
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் நான் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன். இந்த விஷயத்தில் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்களை பரிசீலிக்குமாறு அமைச்சரவையை கேட்டு இருக்கிறேன். இது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படும். எந்த முடிவை எடுத்தாலும் அதை மக்களுக்கு அறிவிப்போம்.
முஸ்லிம் கல்வி:
கல்வி மற்றும் பயிற்சிகளில் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு ஈடுபட வேண்டுமோ, அந்த அளவுக்கு ஈடுபடவில்லை. அவர்களது பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கையிலும் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கல்வி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 15 அம்சத் திட்டத்தை உண்மை, நேர்மையுடன் செயல்படுத்துவோம்.
கற்பனைக் குதிரை:
இடதுசாரிகளின் ஆதரவை நீங்கள் தவற விட்டு விட்டீர்களா? என்ற கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்:
‘‘எண்ணங்கள் குதிரைகளானால், பிச்சைக்காரர்கள் கூட அதில் ஏறி சவாரி செய்யலாம்’’ என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வருகிறது.
(அர்த்தமற்ற கற்பனைகள், ஆசைகள் மூலம் அடைய முடியாததை அடையலாம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது)
இந்த பழமொழியை கூறிய பிரதமர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, ‘‘ஒரே கருத்துடைய கட்சிகள் மக்கள் நலனிலும், நாட்டு வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்டு ஆதரவு தர முன் வந்தால் வரவேற்போம்’’ என்றார்.
தீவிரவாதம்:
இந்து தீவிரவாதம் வளர்ந்து வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘‘தீவிரவாதத்தை மதத்துடன் இணைப்பதை நான் ஏற்க மாட்டேன். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. சில சக்திகள் தங்களது கொடுமையான செயல்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கின்றன. இந்த சக்திகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்தியா நிபந்தனை:
பாகிஸ்தான் உடனான உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், ‘‘இரு நாடுகளின் உறவில் நம்பிக்கை குறைபாடு தான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாகிஸ்தான் தனது எல்லையை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற நிபந்தனையைத் தான் இந்தியா விதிக்கிறது’’ என்றார்

சோதனையிலும் சாதனை


சர்வதேச ரீதியாக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்த நாடுகளில் இலங்கை 7 வது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தம் காரணமாக 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரினாலும் நாட்டில் குழப்பநிலை மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வரிசையில் பாக்கிஸ்தான் முதலாவது இடத்தில் உள்ளது.

இதேபோல, கொங்கோ குடியரசு இரண்டாவது நிலையிலும், நீண்ட யுத்தத்தினால் பாதிப்படைந்த சூடான் 3 வது இடத்திலும், சோமாலியா நான்காவது இடத்திலும் உள்ளன.

இஸ்லாமிய போராளிகளின் ஆதிக்கம் பெரிய அளவில் உள்ள பிலிப்பீன்ஸ் 5 வது இடத்தில் உள்ள அதேவேளை, ஆறாவது இடத்தில் கொலம்பியா என அந்த ஆய்வறிக்கையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அதிகரித்து வரும் யுத்தங்கள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் காரணமாக 2 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் நீண்டகாலமாக வாழ்வதாக ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

May 24, 2010

கண்ணைத்திறக்கனும் சாமி


சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிக்கியிருக்கும் தனது மனைவி, 2 மகன்களை மீட்டுத் தருமாறு நெல்லையை சேர்ந்த பழ வியாபாரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.
பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் சகாய ஜார்ஜ்(40). பழவியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்ய விமலா (35). மகன்கள் அருண் பிரகாஷ் (14), அஜய் ஆண்ட்ரோ (12). நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங்கிடம், சகாயஜார்ஜ் நேற்று காலை புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2006ம் என் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெல்லை விடுதியில் தங்கி இருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஓசோமணி கொடுத்த விளம்பரத்தை பார்த்து அவரிடம் எனது மனைவியை அழைத்துச் சென்றேன். தன்னை நித்யானாந்தாவின் சீடர் என்றும், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பேன் என்றும் ஓசோமணி கூறினார். அதை நம்பி எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினேன். ஒருநாள் ஓசோமணி, எங்கள் வீட்டுக்கு வந்து ஆரோக்யவிமலாவுக்கு அக்குபஞ்சர் வைத்தியம் செய்வதாக கூறி ரூ.50 ஆயிரம் வாங்கினார். நித்யானந்தாவின் பெருமைகளை கூறி, எனது மனைவிக்கு ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதன்பிறகு எனது மனைவி நித்யானந்தாவின் தீவிர பக்தையானாள். வீடு முழுவதும் நித்யானாந்தாவின் படங்களை வைத்து பூஜித்து வந்தார்.

எனது மனைவி, மகன்களை ஓசோமணி பெங்களூர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். நித்யானா ந்தாவால் செயல்படுத்தப்பட்டு வரும் `பிசி‘ சேவை திட்டத்தில் எனது மனைவியை உறுப்பினராக்கினார்.

இதற்காக ரூ.5 ஆயிரத்தையும் ஓசோமணி பெற்றுக் கொண்டார். நித்யானந்தா பங்கேற்கும் ஆன்மீக சொற்பொழிவு, தியான பீடங்களுக்கும் எனது மனைவியை அழைத்துச் சென்றார். இது எனக்கு பிடிக்காததால் கண்டித்தேன்.

இந்நிலையில் சாமியார் நித்யானாந்தாவின் பாலியல் லீலைகள் பத்திரிகையில் வெளியாயின.

இதை பார்த்த நான், ஓசோமணியிடம் போனில் பேசினேன். எனது மனைவி, குழந்தைகள் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பதாக கூறினார். ஆசிரமத்துக்கு சென்ற போது என் மனைவியைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

ஓசோமணியையும் சந்திக்க முடியவில்லை. என் மனைவி, மகன்களை வசியம் செய்து அழைத்துச் சென்ற ஓசோமணி மற¢றும் நித்யானாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவி, மகன்களை அவர்களிடமிருந்து மீட்டு தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்

சொல்லுவதைவிட செயல்களே அதிகம் வெற்றி பெறும்


புலம்பெயர்ந்த தமிழர்களின் காத்திரமான அரசியல் முன்னெடுப்பாக சர்வதேசம் கருதும் நாடுகடந்த அரச அமைப்பானது இலங்கையைப் பீதிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இலங்கை அரசின் சார்பில் நாடு கடந்த அரசு தொடர்பாக விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா முதலைக்கண்ணீர் வடித்துள்ளார்.

இலங்கையின் துணை மீள்குடியேற்ற அமைச்சரான கருணா இன்று இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில், இந்த தமிழீழ நாடுகடந்த அரசமைக்கும் முயற்சியால் புலம் பெயா்ந்த தமிழர்கள் மூன்றாகப் பிரிந்து நிற்பதாகவும், எனவே இம் முயற்சி சாத்தியப்படும் தன்மை இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளதுடன்,

இலங்கையில் எந்தவித ஆதரவையுமே பெறாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி தமிழீழ விடுதலை தொடர்பான இன்னொரு கனவே என்று பரிகசித்துள்ளதுடன், இவ்வாறு இந்த முயற்சியை முன்னெடுப்போர் மூன்று பிரிவுகளாக இந்த விவகாரத்தில் பிரிந்துள்ளதால், இது விடயத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அக்கறையை அவ்வளவு வெளிக்காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள உருத்திரகுமாரன் தலைமையிலான ஒரு பிரிவு, நோர்வேயிலுள்ள நெடியவன் தலைமையிலான இன்னொரு பிரிவு, லண்டனிலுள்ள இன்னொருவர் தலைமையிலான இன்னொரு பிரிவு என மூன்று பிரிவுகளை கருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாவின் இக் கூற்றானது இப் பணியை முன்னெடுத்துச் செல்லும் உருத்திரகுமாரன் தலைமையிலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிற்கு மாசு கற்பிக்கும் விதமான இலங்கை அரசின் பிரசாரங்களை முன்னெடுக்கும் பிரசாரங்களில் ஒன்று என்பதையும், நாடு கடந்த அரசு தொடர்பாக இலங்கை அரசு அடைந்துள்ள பீதியை தனது பேட்டியில் கருணா வெளிக்காட்டியுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த அரசானது திரு. உருத்திரகுமாரனது முயற்சியில் உருவான ஒரு வலுமிக்க அமைப்பு என்பதும் எத்தகைய எதிர்ப்புக்களிற்கு மத்தியில் அவர் இதனை நடைமுறைப்படுத்தினார் என்பதும் தமிழ் மக்கள் அறிந்ததே. எனவே இவ்வாறு இலங்கை விரும்புவது போல இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரிவுகளாக உள்ளவர்கள் குழப்புவதற்கு இடமளிக்காமல் முன்னெடுத்துச் செல்வதே இலங்கையின் பிரச்சாரத்தை முறியடிக்கும்.

குறிப்பாக நாடு கடந்த அரச தேர்தலில் வாக்களித்த தமிழ்மக்கள் தங்களின் வாக்குக்கள் மூலம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது உருத்திரகுமாரனின் இந்த நாடுகடந்த அரச செயற்பாட்டை தங்குதடையின்றி மேற்கொள்ளவே என்பதை அதன் உறுப்பினர்கள் நன்கு அறிந்துள்ள நிலையில் இவ்வாறு இலங்கை அரசு விரும்பும் பிரிவினை ஏற்பட தாங்கள் காரணமாய் அமைய மாட்டார்கள் என்பது உறுதி. எனவே மக்கள் தற்போதைய நாடுகடந்த அரசின் தலைமைக்கும் அதன் உறுப்பினர்களிற்கும் தொடர் ஆதரவை வழங்குவார்கள் என்பது திண்ணம்

May 21, 2010

எனக்கும் பத்மப்ரியாவுக்கும்...


... பத்மப்ரியாவை விட்டுடுங்கய்யா. நானும்அவங்களும் கல்யாணம் பண்ணிக்கிறோம்னு முக்கிய தலைகள் சில பேருக்கு கடிதம் வந்திருக்கு கேரளாவிலிருந்து. கோடம்பாக்கத்தில் உலாவரும் இந்த மினி சைஸ் அணுகுண்டை போட்ட அநாமத்து வாலிபன் யாராக இருக்கும் என்று மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த முக்கிய தலைகள்.

முன்னணி நடிகைகள் பலருக்கும் மேனேஜராக இருக்கும் மனோஜ் என்பவருக்கு ஒரு மொட்டை கடிதம் வந்ததாம். அதில் தனது பெயரை குறிப்பிடாத வாலிபர் ஒருவர், பத்மப்ரியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வாங்கி தர்றீங்க. பொக்கிஷம் படத்தின் போதே அவளுக்கு கல்யாணம் வரப்போவுது. வேணாம் இந்த வேலைன்னு கடிதம் அனுப்புனேன். கேட்காம செஞ்சிங்க. அதுக்கு பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்திங்க. இதனால் எங்க கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கு. இதோட இந்த வேலைய நிறுத்திக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேறன்னு மிரட்டியிருக்காராம் அந்த ஆசாமி.

கேரளா வரைக்கும் போன் போட்டு விசாரிச்சதில கிடைச்ச தகவல் இதுதான். அஜய்குமார்னு ஒரு வாலிபருக்கும் பத்மப்ரியாவுக்கும் பழக்கம் இருப்பதாகவும் அவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கார்னும் கிசுகிசுக்கிறாங்க. ஆச்சர்யம் என்னவென்றால் பத்மப்ரியாவிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சேரன், லாரன்ஸ், மேலும் சில நடிகைகளின் மேனேஜர்களுக்கும் இந்த கடிதத்தின் நகலை அனுப்பியிருக்கிறாராம் இந்த மொட்டை கடுதாசி வாலிபர்.